சிறுபான்மையினத்தைச்சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கல்விஉதவித்தொகைகளை வழங்குகிறது.
பேட்டி
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மேலாளர் ரிஸ்வான் அகமது கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை(மெரிட் ஸ்காலர்ஷிப்) வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சிறுபான்மையினத்தைச்சேர்ந்த 753 மாணவ-மாணவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் கல்வி உதவித்தொகையாக 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் நாகலாந்து, திரிபுரா போன்ற மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை அந்த மாநில அரசுகள் மாணவர்களுக்கு வழங்காததால், தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதன்பேரில் கூடுதலாக 558 மாணவ-மாணவிகளுக்கு 11/2 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியது. அந்த தொகையையும் மாணவர்களுக்கு வழங்கி உள்ளோம்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கும்...
அதேப்போல் 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு கடந்த ஆண்டில் ஆரம்பித்தது. அந்த திட்டத்தின் கீழும் தமிழகத்துக்கு 90 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 711 மாணவ-மாணவிகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று உள்ளது. இதில் 30 சதவீதத்தொகை மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த நிதியின் கீழ் முதல், முதலாக கடலூர் மாவட்டத்தில் 45 மாணவ-மாணவிகளுக்கு 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த கல்வி ஆண்டில் புதிதாக 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிப்பவர்களில் 15 ஆயிரத்து 340 மாணவ-மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி வருகிற 31-ந்தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் அந்த விண்ணப்பபடிவங்களை சரிபார்த்து, வகுப்பு வாரியாக, வருமானம் வாரியாக , இனம் வாரியாக தொகுக்கப்பட்ட விவரங்களை மட்டும் http://www.minorityaffairs.gov.in/ http://www.tn.gov.in/bcmbcmw/doc என்ற இணைய தள முகவரியில் உள்ள உரிய படிவம் மற்றும் குறுந்தகட்டுடன் பதிவு செய்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பரிசு
எம்.பி.பி.எஸ்., பி.இ. படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 1,869 மாணவ - மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அவர்களுக்கு அந்த படிப்பு முழுவதும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். நடப்பு ஆண்டில் மேலும் 867 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இது தவிர மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கும், உருதுவில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் சிறப்புபரிசுகள் வழங்கப்படுகிறது.
இவ்வாறு ரிஸ்வான் அகமது கூறினார்.
அப்போது சென்னை சிறுபான்மையினர் நலத்துறை கண்காணிப்பாளர் விக்னேசுவரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி இளங்கோ ஆகியோர் உடன் இருந்தனர்.
நன்றி தினத் தந்தி

0 comments:
Post a Comment